திங்கள், 8 செப்டம்பர், 2014

ஆகஸ்ட் -3, 2014 பிறந்த நாள்! 55 - வயது.

ஆம் இன்று ஆகஸ்ட் - 3 எனது பிறந்த நாள்- வயது 55.
மீனாம்பாள்
D/o மா.பரமசிவம்- பாப்பாத்தியம்மாள் - மதுரை.
தசரதன்
S/o சுப.மீனாட்சிசுந்தரம்- லெட்சுமியம்மாள் -சிவகங்கை
ஆம்! எனது தாய்-தந்தை 

D.பாண்டியராஜன் எனப் பெயர் சூட்டப்பட்டு, 1977 முதல் த.பாண்டியன் எனப் பின்னர் 2007 முதல் மீ.த.பாண்டியன் ஆக முகநூலில் மார்க்ஸ் பாண்டியனாக பரிணாமம். எனக்கு இம்மண்ணில் தவழ, விளையாட, பேச, கொஞ்ச, கோபப்பட, சிரிக்க, அழுக, கல்விகற்க, கலைஞனாக, போராட, நட்பு, தோழமை பாராட்ட வாய்ப்பளித்த நாள். கடந்த ஆண்டு முகநூலில் எனது பிறந்த நாளை வெளிக்காட்டாமல் மறைத்தேன். 1959 ஆகஸ்ட்- 3 ல் பிறந்த எனக்கு வயது 55 .
நாரதன் பெண்ணாக மாறி உறவாடிப் பெற்றெடுத்த 60 வருடங்களை நினைவூட்டி 60க்கு60 என மீண்டும் தாலி கட்டுவது இந்து மத சடங்காச்சாரம். நாம் கொஞ்சம் வித்தியாசமாக 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99 எனக் கொண்டாடலாம். 1976 இறுதியிலிருந்து நான் நாத்திகன். டாக்டர் கோவூர் எனது ஆசான். பின்னர் 1977 நடுவில் நண்பன் பி.வரதராசன் மூலம் பகுத்தறிவாளர் கழகம். தொடர்ந்து திராவிடர் கழகம். ஆடி 18 ஐ எனது அம்மாவும், ஆகஸ்ட் 3 ஐ நானும் எனப் பஞ்சாயத்துதான். சில ஆண்டுகள் எனக்கு இரண்டு பிறந்த நாட்கள்.
நான்கு ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள். மூத்தவன் நான். எனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம். புத்தாடைகள்.
பிறந்த நாள் அன்று கட்டாயம் கோவிலுக்கு எனது அம்மாவுடன் சென்றாக வேண்டும். 1977 லிருந்து கோவிலுக்கு வர மறுக்கும் போராட்டம். அம்மாவின் பக்திக்கும் எனது பகுத்தறிவுக்கும் அம்மா இறக்கும் வரைக்கும் போராட்டம்தான். அம்மா மீனாம்பாள் -அப்பா தசரதன் இருவரின் திருமணமே சமூக மீறல்தான். சாதி மீறல் இல்லை. அப்பா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகளில் கூத்தகுடி சண்முகம் அவர்களுடன் நடமாடியவர். அப்பாவின் அம்மா அதாவது லெட்சுமி அம்மாள் அப்பத்தாவின் ஊர் கூத்தகுடி. அப்பாவின் தந்தையார் மீனாட்சி சுந்தரம் அவர்கள் கட்டிய மனைவி, பிள்ளைகளை விட்டு மலேசியா சென்று அங்கொரு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டதால் சிவகங்கையை விட்டு தனது ஊரான கூத்தகுடியில் பிள்ளைகள் வளர்த்தார்.
சிவகங்கையை விட்டு மதுரை வந்து எனது அம்மாவை திருமணம் செய்துகொண்டு திருப்பத்தூர், காரைக்குடி என கம்யூனிஸ்ட் கட்சி உறவுகளின் துணையுடன் அலைந்து, திரிந்து பின்னர் மதுரையில் எனது அம்மா வீட்டில் மதுரையில் பெற்றேடுத்தனர். அம்மா-அப்பா இருவரிடம் வளர்ந்ததை விட எனது அம்மாச்சி- தாத்தா வீட்டில் வளர்ந்தவன். மதுரை வீரமாமுனிவர் நடுநிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வி, அருப்புக்கோட்டை சைவபானு ஷத்திரிய உயர்நிலைப் பள்ளியில் 4, மற்றும் 5ஆம் வகுப்பு, மதுரை தேவசகாயம் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு, 7 முதல் 11 வரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் என எனது பள்ளிக் காலம். மதுரை யாதவர் கல்லூரியில் புகுமுக வகுப்பு, மதுரை தியாகராசர் கல்லூரியில் மூன்றாண்டு விலங்கியல். கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது! நான்கு நாட்கள் மதுரை மத்திய சிறையில். கல்லூரி முடித்த கையோடு திராவிடர் கழகம் அறிவித்த மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் கைது! சேலம் சிறையில் 10 நாட்கள்.
1982 முதல் மறைந்த தோழர் ஏ.பி.வள்ளிநாயகம் அறிமுகத்தின் வழி தோழர் டி.எஸ்.எஸ். மணி மூலம் சி.பி.ஐ(எம்-எல்) கட்சியில் தொடர் செயல்பாடு. 1984இல் சாதி மறுப்பு, மலையாளப் பெண்ணுடன் எனது திருமணம். மா-லெ கட்சித் தொடர்புக்குப்பின் எனது பிறந்த நாள் எனும் நிகழ்வுகளிலிருந்து விடுபட்டேன். எனது அன்புத் தங்கைகள், நண்பர்கள் இன்றும் வாழ்த்துச் சொல்ல அழைப்பார்கள். சமூக மாற்றத்திற்கான அரசியல், பண்பாட்டுப் போராளியாக நான் என்னை தகவமைத்துக் கொள்ள எனக்கு வாய்ப்பளித்த எனது தாய் தந்தையரின் சனநாயகத் தன்மையே எனக்குள் சனநாயத்திற்கான குணத்தை வளர்த்தது. ஆம். நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் எனது வளர்ச்சிக்கு காரணமாயினர். 1992இல் மணமுறிவு. தேவகோட்டையும், திருவாடானையும், ஆவுடையார்கோவிலும் சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டக் களத்தால் என்னைப் புடம் போட்டன. 1997இல் மீண்டும் திருமணம்-சாதி மறுப்பு, மத மறுப்பு. 1993 முதல் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகமும், மக்கள் கலை விழாக்களும் எமக்கு உரமூட்டி அடையாளங்களாயின.
2006 ஜூன் மாதம் சி.பி.ஐ(எம்-எல்) லிபரேசன் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு தன்னந்தனியனாய் தளராமல், த.ம.ப.க.வின் மதுரை, நெல்லை - மக்கள் கலை விழாக்கள், தினகரன் அலுவலக எரிப்புப் படுகொலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராக, மக்கள் சனநாய விடுதலை முன்னணியாக, பின்னர் ஓராண்டுகழித்து 2007ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை உருவாக்கப்பட்டு, தற்போது புதிய இரத்தம் பாய்ச்சப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு என உங்கள் முன்னே கடமையாற்றுகிறோம். 


தியாகிகள் சேத்தூர் இராயப்பன், மாடக்கோட்டை சுப்பு, மற்றும் மறைந்த தோழர்கள் ஆர்.கே, கோட்டைச்சாமி, ஏ.வி, ஸ்டாலின், செல்வராஜ்ஆகியோருடன் உறவாடி, களமாடி நீண்டகாலமாக எனது கடந்த காலத்தில் தோழர்கள் நமசு, டேவிட், மதிவாணன், பாலசுந்தரம், அண்ணாதுரை, சிதம்பரநாதன் இவர்களோடு அமைப்பு ரீதியாக ஒட்டியும், உரசியும், சமூகத் தளத்தில் தோழர்கள் எழுத்தாளர் ஜவகர், மருத்துவர் கண்ணன், பி.வரதராசன், தமிழ்ப்பித்தன், தளபதி, மருத்துவர் - ஆசிரியர் இராமசாமி, இராமானுஜம், என எனது பயணம் தொடர்கிறது. அன்புச் செல்வங்கள் இராதிகாவும், வானவில்லும் எனது வாழ்க்கையின் வசந்தங்களாகவும், எனது சக போராளியாக, துணையாக ஆரோக்கியமேரியும் .......55 எனக்குள் கடந்த காலத்தைக் கிளறுகிறது.
2008இல் பை-பாஸ் இதய அறுவை சிகிச்சை தோழமைகளின் துணையுடன் எனக்கு நடந்து ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. எனது தாய் மீனாம்பாள் 16-2-1999 அன்று மறைந்தார். எனது தந்தை தசரதன் 28-12-2010 அன்று மறைந்தார். மீ.த. எனும் முன்னேழுத்தைத் தவிர எனது தாய், தந்தையருக்கு நான் எதுவும் செய்தது கிடையாது. அதற்காக வருத்தப்பட்டதும் கிடையாது. எமது மக்களுக்கான கடமையே உயர்ந்த பட்சக் கடமையாக நேற்றும் நினைத்தேன், இன்றும் நினைக்கிறேன், என்றும் நினைப்பேன். 1977 தொடங்கி இயக்க ரீதியாக, 1985 முதல் முழு நேர அரசியல் ஊழியனாக தொடர்கிறேன்.... தொடர்வேன்....

2014 புதிய பயணம்

2012 நவம்பரில் டெல்லி சென்று வந்த செய்திகளைப் பதிவு செய்த பின்னர் நான் 2013 முழுவதும் 2014 இன்று வரை முகநூலில் பதிவதோடு நின்று விட்டேன். மீண்டும் தொடர்கிறேன். கடந்த கால வாழ்க்கை பற்றி , எனக்குள் தோன்றும் கருத்து, அரசியல், அனுபவங்கள், எனத் தொடர்கிறேன்.

1977 - 2001 திராவிடர் கழகத்தில்  தொடர் செயல்பாடுகள். 2001 மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் தோழர்களுடன் கைது செய்யப்பட்டு மதுரையிலிருந்து சேலம் மத்திய சிறையில் 10 நாட்கள். சேலம் சிறை போதிமரம் போல பல்வேறு செய்திகளை எனக்குக் கொண்டு வந்து சேர்த்தது. நாகர் கோவிலைச் சேர்ந்த செல்லூர் செல்லப்பா! தலைமை மட்டம் வரை உள்ள சுயநலத் தன்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார். ஏற்கெனவே எனக்குள் இருந்த இடதுசாரிச் சார்பும், ஈழ ஆதரவு நிலைப்பாடும் ஈரோஸ் தொடர்பில் மதுரையில் தேசிய இன விடுதலை நிலைப்பாடு கொண்ட புரட்சிகர அமைப்பாக இயங்கினோம். பல்வேறு புரட்சிகர மா-லெ இயக்கங்களின் அறிமுகங்கள். வாசிப்புகள்!

மறைந்த தோழர் ஏ.பி.வள்ளிநாயகம் - ஓவியா தங்கை, மச்சான் உறவாக எனது வாழ்வில் புதிய வசந்தம். வசந்தத்தின் இடிமுழக்கம் என நக்சல்பாரி அரசியல் அமைப்பு ஏ.பி.வி மூலம்  அறிமுகமானது. அர்ப்பணிப்பு, தியாகம், வள்ளி நாயகம் மச்சானிடம்  கற்றுக் கொண்டது. டி.எஸ்.எஸ். மணி மூலம் அமைப்பில் இணைந்தேன். எனது பொது வாழ்வின் அடுத்த கட்டம் தொடங்கியது. தொடர்ந்தது.

2002 ஆம் ஆண்டிலிருந்து சி.பி.ஐ(எம்-எல்) விடுதலையின் பல்வேறு அரங்குகளில், மாவட்ட, மாநில  மட்டங்களில் கட்சி ஊழியனாக இயங்கிய நான், 2006 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) விடுதலையின் தலைவர்களின் சதித்தனத்தால்  திட்டமிட்டு வெளியேற்றப்பட்டேன். மீண்டும் திரும்புவதில்லை என முடிவெடுத்தேன். மா-லெ நீரோட்டத்தில் அனைத்திந்திய அமைப்பில் 25 ஆண்டுகள். எனது வாழ்வின் பல்வேறு கட்டங்களில் ஒரு நீண்ட கட்டம் முடிந்தது.

மீண்டும் வேர்களைத் தேடி .... தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகச் செயல்பாடுகளாக  2007 மார்ச் ஏகாதிபத்திய எதிர்ப்பு மாவீரன் பகத்சிங் தூக்குமேடை நாளையொட்டி மதுரையில் " மக்கள் கலை விழா ",   2007ஆகஸ்ட் - 9 அன்று  " வெள்ளையனே வெளியேறு " நாளில் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழக முதல் மாநாடும், " மக்கள் கலை விழா " நடத்தினோம்.
2007 டிசம்பர் - 25  வெண்மணிப் படுகொலை நாளில் பின் வெண்மணி - கீழைத்தீ தோழர் பாட்டாளி எழுதிய நாவல் திருச்சியில் வெளியிட்டோம்.

2007 சி.பி.ஐ.(எம்-எல் ) விடுதலையிலிருந்து தோழர் அண்ணாதுரை, தோழர் சிதம்பரநாதன் தலைமையில் வெளியேறி வந்தனர். 2007அக்டோபர் 14 அன்று சென்னை - திருவொற்றியூரில் கூடினோம். மக்கள் விடுதலை இதழ் பிறந்தது. இ,க.க ( மா-லெ ) மக்கள் விடுதலையாகப் பரிணமித்தது. 2010  ஏப்ரல் - 22,23 சென்னை - திருவொற்றியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு முதல் மாநாடு நடத்தினோம்.  தமிழ்மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப் பட்டேன்.
மாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து வெளியேறிய தேசிய முன்னணி இதழ் - பாலன் தலைமையிலான அமைப்பினருடன் ஒன்றிணைந்து ஈழ ஆதரவுப் போராட்டங்கள், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பில் இணைந்து செயலாற்றிய இயக்கப் போக்கில் 2013 தொடக்கத்தில் இணைந்து ஓரமைப்பாக " கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ )மக்கள் விடுதலை, தமிழ்நாடு " அமைப்பை உருவாக்கினோம். அமைப்பின் பொதுச் செயலாளராக இயங்கினேன். 2014 சூலை 26, 27, 28 எமது கட்சியின் ஒற்றுமை மாநாடு சென்னை- திருவொற்றியூரில் நடத்தி முடித்ததோடு என்னுடைய பயணத்தில் ஒருகட்டம் முடிந்து அடுத்த கட்டம் தொடங்குவதாகக் கருதுகிறேன்.